Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 24 பிப்ரவரி (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அம்மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த முதலமைச்சர், அங்கிருந்து கார் வழியாகக் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தார்.
அவருக்குக் கன்னியாகுமரி 'ஜீரோ பாயிண்ட்' பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பைத் தொடர்ந்து, கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்களை அவர் நேரில் சந்தித்துச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்புப் பகுதியில் ரூ. 1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்காரத் தோரண நுழைவு வாயிலை' முதலமைச்சர் முறைப்படி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக அவர் கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை திறந்துவைத்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Hindusthan Samachar / vidya.b