Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
தற்போது, சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே தினசரி நான்கு அல்லது ஐந்து விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் பகல் நேர சேவைகள் மட்டுமே.
இதன் காரணமாக, இரு மார்க்கங்களிலும் பணி காரணமாக காலையில் பயணம் செய்பவர்கள், ஒரே நாளில் திரும்பி வர வேண்டுமெனில் அவசர அவசரமாக பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு இல்லையெனில், அவர்கள் ஒரு இரவு தங்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் மார்ச் 29-ஆம் தேதி முதல் தூத்துக்குடிக்கும் சென்னைக்கும் இடையே இரவு நேர விமான சேவையைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து தினமும் மாலை 6:15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:55 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். பின்னர், தூத்துக்குடியில் இருந்து இரவு 8:15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9:45 மணிக்கு சென்னை சென்றடையும்.
தூத்துக்குடி விமான நிலையம் 2004-ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியாக வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது. அப்போதிருந்து, தூத்துக்குடியில் இருந்து இரவு நேர விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பின்னர் நடைபெற்ற விமான நிலைய விரிவாக்கப் பணிகளின்போது, இதற்கான அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு, தற்போது இரவு நேர விமான சேவை தொடங்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த சேவையானது தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
Hindusthan Samachar / JANAKI RAM