Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 24 பிப்ரவரி (ஹி.ச.)
திருச்சி கருமண்டபம் ஜெயா நகரை சேர்ந்த தம்பதியினர் காரில் திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள அரிஸ்டோ மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே கண்டெய்னர் ஏற்றிச் சென்ற லாரி மேம்பாலத்தில் திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் லாரியில் இருந்த கனரக கண்டெய்னர் இரும்புப் பெட்டி திடீரென பக்கவாட்டில் சரிந்து, நேராக காரின் மீது விழுந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் கடுமையாக நசுங்கியது.
ஆனால் காரில் பயணம் செய்த தம்பதியினர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக மன்னார்புரம் பகுதியில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரை நீண்ட தூரத்திற்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN