Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் உருவச்சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்தார்.
அதிமுக கொடி ஏற்றி வைத்து நிர்வாகிகளுக்கு இனிப்புகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அதிமுகவின் 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இபிஎஸ் வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
ஸ்டாலின் தலைமையிலான நிர்வாக திறனற்ற திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் விலைவாசி விஷம் போல ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதே போல திமுக ஆட்சி அமைந்த பின்னர் சொத்துவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டன. இதனால் மக்களின் அன்றாட தேவைகளுக்கான குடும்பச்சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
எனவே மக்களின் சுமையை குறைக்கும் வகையில், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணை தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
இந்த கருணைத்தொகையானது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.2000, பிளஸ் 2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்காலங்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகை ரூ.8000. இந்த தொகை ரூ.12,000 உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்ந்து ரூ.1000 வழங்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
கொரோனா காலத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. அதனால் வருவாயை பெருக்கி, அதன் மூலமாக நாங்கள் அறிவித்துள்ள நலத்திட்டங்களை முழுமையாக வழங்கப்படும்.
நிதித்துறையை சேர்ந்தவர்கள் மூலம் எந்தெந்த வகைகளில் நிதியை பெருக்கி, நலத் திட்டங்களை வழங்க முடியுமோ அப்படி வழங்குவோம். நிபுணர்கள் மூலமாக எந்தெந்த துறைகளில் வரியை உயர்த்தி, நாங்கள் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அப்படி செயல்படுத்துவோம்.
இந்த ஆட்சியில் மக்களின் நிலைமை வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய சூழலுக்கு போய்விட்டது. ஆகவே முதலில் மக்களை காப்பாற்ற வேண்டும். விலைவாசி அதிகரித்து விட்டது.
அதில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற அந்த அடிப்படையில் தான் இந்த தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். எந்த எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் என்று இன்னமும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை. விரைவாக நாங்கள் எங்களின் பேச்சுவார்த்தையை தொடங்குவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு விட்டது. அதிமுக அதில் சேர்ந்திருக்கிறது. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சீட்டுகளை பெறுவோம் என்று கூறி உள்ளன. அந்த அடிப்படையில் தான் எல்லாம் நடக்கும்.
கேஎன் நேரு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து திமுக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது எங்களின் கோரிக்கை. திமுகவுக்கு எதிராக வந்த எந்த தீர்ப்பையும் அவர்கள்(திமுக) மதித்ததே இல்லை.
உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று வந்தபின்னரும், தமிழகத்திற்கு சட்டம் ஒழுங்கு நிரந்தர டிஜிபியை இவர்கள் நியமனம் செய்தார்களா? நீதிமன்ற உத்தரவை, தீர்ப்பை மதிக்காமல் இருக்கும் ஒரே அரசாங்கம் இந்த திமுக அரசாங்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b