நல்லகண்ணு உடல் நலம் குறித்து வதந்தி பரப்பாதீர்கள் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!
சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் மற்றும் சமூகப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவருமான ஆர். நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப
Nallakannu


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச.)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் மற்றும் சமூகப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவருமான ஆர். நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

101 வயதை கடந்து உள்ள அவர், கடந்த சில வாரங்களாக வயதுமூப்பு காரணமாக உடல்நல பிரச்சினைகளால் மருத்துவர்களின் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து சிறப்பு மருத்துவர் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று

(பிப்ரவரி 24 ஆம் தேதி) அவரது உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சில இணைய தளங்களில் அவர் உயிரிழந்து விட்டதாக தவறான செய்திகள் வேகமாக பரவத் தொடங்கின.

இந்த சூழ்நிலையில், பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்து உள்ளது. கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா. பெரியசாமி வெளியிட்டு உள்ள வீடியோவில், நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரப்பப்படுவதாகவும், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

சமூக நீதி, விவசாயிகள் உரிமை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் நல்லகண்ணு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் கூறப்பட்டது.

மருத்துவர்களின் தகவலின் படி, அவரது உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், இன்னும் முழுமையான ஆபத்து நிலையை அவர் தாண்டவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும், அவரது நிலை குறித்து அதிகாரப்பூர்வ மருத்துவ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்பதையும் கட்சி வலியுறுத்தி உள்ளது.

நல்லகண்ணு நீண்டகாலமாக இடதுசாரி அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர் மட்டுமல்லாமல், எளிமையான வாழ்க்கை முறை மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக இணைந்த அரசியல் தலைவராகவும் அறியப்படுகிறார்.

அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மூத்த தலைவர் நல்லகண்ணு விரைவில் உடல்நலம் பெற்று மீள வேண்டும் என்ற பிரார்த்தனைகள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், தவறான தகவல்கள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு சார்பில் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN