Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 பிப்ரவரி (ஹி.ச)
இந்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.
இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன் படி 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 21 முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை சுமாா் 13 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ஜேஇஇ 2-ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன்
(பிப்ரவரி 25) நிறைவு பெறுகிறது.
இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.
முதல்கட்ட தேர்வை எழுதிய மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.
தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு உள்பட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என என்.டி.ஏ அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b