Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 25 பிப்ரவரி (ஹி.ச.)
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில அளவை துறையில் பணியாற்றி வரும் அனைத்துநிலை அலுவலர்கள் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல், தனி ஊதியம் அறிவித்தல், வருவாய்துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணிபாதுகாப்பு சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் சுமார் 800 வருவாய்துறை அலுவலர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டம் காரணமாக வருவாய்துறை தொடர்பான நிர்வாக பணிகள் மட்டுமின்றி தேர்தல் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அலுவலர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN