Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 பிப்ரவரி (ஹி.ச)
மதுரையின் மீது திமுக அரசுக்கு அப்படி என்ன விரோதம் என்று தெரியவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
முதலில் திருப்பரங்குன்றம் இப்போது கள்ளழகரா?.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையின் மீது திமுக அரசுக்கு அப்படி என்ன விரோதம் என்று தெரியவில்லை.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு முட்டுக்கட்டை போட்டு வரும் இந்து விரோத திமுக அரசு தற்போது உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவையும் அவமதிக்கும் விதமாக கோரிப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் கள்ளழகர் இன்றி குதிரை மட்டும் இருக்கும் ஓவியத்தை வரைந்து இந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கிறது.
வரலாற்று காலந்தொட்டே சித்திரை திருவிழாவும் மதுரையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ள சூழலில் தற்போது இது போன்ற காட்சிகள் மத நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது. இப்படி தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்து விரோத தீயசக்தியான திமுக.
இனியும் விழிக்காவிடில் நமது தமிழகமே தன் அடையாளத்தை இழக்க நேரிடும்.
எனவே கள்ளழகர் இன்றி வரையப்பட்டுள்ள ஓவியத்தில் உடனடியாக திருத்தம் செய்து மீண்டும் கள்ளழகருடன் ஓவியத்தை முழுமை பெறச் செய்ய வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ