Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 பிப்ரவரி (ஹி.ச.)
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் விலைமதிப்பற்ற வாக்குரிமையைப் பயன்படுத்த அதிக மக்கள் வாக்குச்சாவடிக்கு வர வேண்டுமென்றால், வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிய மனுக்களை விசாரித்தபோது,
தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி அடங்கிய அமர்வு இந்த கருத்தைத் தெரிவித்தது.
மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய, கடுமையானதாக இல்லாவிட்டாலும்,
ஒரு
கட்டாய நடைமுறை இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
எளிய மக்களை விட, பணக்காரர்கள் மற்றும் படித்தவர்களின் பங்கேற்பு தான் வாக்குப்பதிவில் குறைவாக இருப்பதாக தனது அனுபவத்தில் உணர்வதாக நீதிபதி பாக்ஜி குறிப்பிட்டார்.
கிராமங்களில் வாக்குப்பதிவு நாள் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, குழுவாகப் பாட்டுப் பாடியும் ஆடியும் வாக்குச்சாவடிகளுக்கு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருக்கும் இடங்களில் வாக்காளர்கள் 'நோட்டா' விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்திற்கு பதிலளித்த நீதிமன்றம், நோட்டா முறையினால் வாக்குப்பதிவு சதவீதத்திலோ அல்லது வேட்பாளர்களின் தரத்திலோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியது.
ஒரே ஒரு வேட்பாளர் போட்டியிடும் இடத்தில், அந்த வேட்பாளருக்கு நோட்டாவை விடக் குறைவான வாக்குகளே கிடைத்தால், அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது. இந்த மனு மீதான விசாரணை மீண்டும் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam