Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை சவுகார்பேட்டை சிங்கண்ணன் தெருவில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் ஸ்த்ரீ சாய் வாக்ஸ் & ஸ்ரீசய் பார்பூல் வாக்ஸ் என்ற பெயரில் நகைபட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது.
கொல்கத்தா ஒளரா மாவட்டத்தை சேர்ந்த சுமன் பால் பி சோகித்(35) என்பவர் இந்த நகைப்பட்டறையை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி பாயல்பாகு என்ற மனைவியும் நான்கு வயதில் குஷி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த பட்டறையில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இங்கு பழைய மற்றும் புதிய தங்கத்தை உருக்கி புது நகைகள் தயாரித்து சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் 4 வது மாடியில் செயல்பட்டு நகைப்பட்டறையில் ஊழியர்கள் நகைகளை உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அங்கிருந்த சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.
அடுத்தது இரண்டு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து ஊழியர்கள் 7 தீயில் சிக்கி படுகாயமடைந்தனர்.
அப்போது சிலிண்டர் வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடினர். உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உயர்நீதிமன்றத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால், உட்பட் 7 பேரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
அங்கு அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீவிபத்து குறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஊழியர்கள் தங்கத்தை உருக்கும் போது கேஸ் சிலிண்டரில் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது..
மேலும் இந்த தீவிபத்தில் நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் மற்றும் நகைப்பட்டறை ஊழியர்களான மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் தாக்கல்(27),
கொல்கத்தாவை சேர்ந்த சிமந்தோமால்(47),
சூரஜ்(25),
ஜாந்தோ இந்தர்ஜித் (40), ராகேஷ் டேலி(26),
ஆனந்து(32) ஆகிய ஏழு பேர் படுகாயம் ஏற்பட்டு கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது..
இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைப்பட்டறை உரிமையாளர் சுமன்பால் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அரவிந்த் நாங்கல், ஜாந்தோ இந்திரஜித் ஆகிய இருவரும் 90 சதவீதம் தீக்காயங்களுடனும், சிமந்தோமால் , ராகேஷ் டேலி இருவரும் 80 சதவீதம் தீக்காயங்களுடனும் கவலைக்கிடமான முறையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஆனந்து மற்றும் சூரஜ் இருவரும் 70 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ