Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 26 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து ரீதியாக மோதல் நடைபெற்று வருகிறது.
அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் (தரப்பு) தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (26.02.2026) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பதாக செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறுகையில்,
தேர்தலில் எப்படி பணியாற்றுவது?. என்ன மாதிரியாக யுக்திகள் கையாளுவது. நிர்வாகிகளுக்கு தெரிந்த யுக்திகள் எல்லாம் கேட்டு எல்லோரும் அதன்படி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதற்காக ஒரு கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டணி குறித்து இன்றைக்கே முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் அதற்கான களம் சரியாக அமையாது. அதனால் கூட்டணி குறித்து நேரம் வரும்போது கூறுவேன், எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், திராவிட கட்சிகளோடு கூட்டணி இருக்குமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராமதாஸ் வரும் 28ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b