Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 27 பிப்ரவரி (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன.
இந்த பணிமனைகள் அனைத்தும் நாகப்பட்டினம் மண்டல அலுவலகத்தின் கீழ் இயங்குகிறது. நாகப்பட்டினம் மண்டல அலுவலகத்தின் கீழ் 543 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவிலான பேருந்துகள் விபத்தில் சிக்குவது நடுவழிலேயே பேருந்து பழுதாகி நின்று விடுவது போன்ற நிகழ்வுகள் நடந்ததால் அதற்கு திருஷ்டி பரிகாரமாக போக்குவரத்து பணிமனைகளில் யாகம் வளர்க்க வேண்டுமென போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தசரதன் உத்தரவின் பேரில் அந்தந்த போக்குவரத்து கழக பணிமனைகளில் யாகம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருவாரூர் பணிமனையில் கிளை மேலாளர் ஜெய்சங்கர் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து இன்று காலை அலுவலகத்தில் கணபதி ஹோமம் செய்து வழிபாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து யாகம் வளர்த்த சிவாச்சாரியார் அலுவலகம் மற்றும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ஏறி புனித நீர் தெளித்து பரிகாரம் செய்தார்.
இந்த நிலையில் பணிக்கு வந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர். ஒரு சில நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் மட்டும் இந்த பூஜை நிகழ்ச்சியில் பயபக்தியுடன் கலந்து கொண்டனர்.
இதே போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டினம் மண்டல அலுவலகத்திலும் பூஜை நடத்தப்பட்டு பேருந்துகளுக்கு புனித நீர் தெளித்து திருஷ்டி கழிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் அவ்வப்போது பராமரிப்பு பணியை மேற்கொண்டு விடுவதால் அந்தப் பேருந்துகள் தரமாக உள்ளது. அதே நேரத்தில் அரசு பேருந்துகள் அதில் ஏற்படும் பழுதுகளை விரைவாக சரி செய்வதில்லை. மேலும் அதில் உள்ள உதிரி பாகங்கள் உடனுக்குடன் மாற்றப்படுவதில்லை இது போன்ற காரணங்களாலேயே பேருந்துகள் பழுதடைந்து வீணாகி வருகின்றன.
இதுகுறித்து ஆய்வு செய்து அறிந்து கொள்ளாமலும், தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் யாகம் நடத்தி பரிகாரம் செய்வது வேடிக்கையாக உள்ளது.
இதற்கான அனுமதியை தமிழக அரசும் போக்குவரத்து துறை அமைச்சகமும் வழங்கியுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டுமென தொழிற்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam