Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.
அவரது எக்ஸ் பக்கத்தில்,
பாஜகவின் ஆகசிறந்த அடிமை ரோபோ என்று திமுகவாலே விமர்சிக்கப்பட்ட ஒருவர், இன்று திமுக என்னும் ‘சலவை இயந்திரத்திற்குள்’ தஞ்சம் புகுந்துள்ளார் என்கிற விமர்சனத்தை திமுகவினரே சமூக ஊடகங்களில் முன்வைத்துள்ளனர் .
தேரதல் ஆழிப்பேரலை அச்சம் காரணமாக அங்கே சேரும் சிலர் கோடைக்கால ஓடை போல திமுகவிற்கு தெரிந்தாலும் அவர்கள் கானல்நீர் என்பது அனைவரும் அறிவர்.
அவர்கள் எல்லாம் இரண்டறக் கலக்கவில்லை; ஒன்றோடு ஒன்றாகக் கூட சேரவில்லை; மாறாக, ஒரு மாபெரும் பூஜ்ஜியத்தோடு இன்னொரு பூஜ்ஜியம் சேர்வதைப் போல, அடையாளமே இல்லாமல் கரைந்து போயிருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் எப்போதும் நிதி மேலாண்மையில் கைதேர்ந்த உடன்பிறப்புகள், இந்த முறை தங்களின் கூட்டணியை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கொள்கைக்காக கூட்டணி சேர்ந்த காலம் போய், இப்போது 'கொள்ளை'க்காகவும் 'கல்லா'விற்காகவும் கூட்டணி அமைக்கும் நிலையில் திமுக தள்ளப்பட்டு உள்ளது. இதை தான் வெற்றித் தலைவர் “கல்லாப் பெட்டி கூட்டணி” என்று கூறினார்.
வாக்களிக்கப் போகும் மக்களின் வயிறு நிறையுமா? அல்லது மன்னராட்சி மனப்பான்மை வீட்டு கல்லாப் பெட்டி மட்டுமே நிறையுமா? என்பதே சாமானிய மக்களின் தற்போதைய சிந்தனை. விஜய் என்ற முதன்மை சக்தியை பார்த்து எத்தனை பயந்து போயுள்ளது திமுக? இப்படியே போனால் அடுத்து அறிவாலயத்தில் தண்ணீர் கேன் போட வரும் தம்பிக்கு கூட சீட் தருவார்கள் போலிருக்கிறது.
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை, அவர் எப்போதும் வால் பிடிப்பார் என்ற வைர வரிகள் நினைவுக்கு வருகிறது என்று பதிவிட்டு உள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN