Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மதுரையில் நாளை (01-03-26) பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.
இதற்காக பிரதமர் மோடி இன்று (28/02/2026) இரவு சென்னைக்கு வருகை தர உள்ளார்.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 1ஆம் தேதி (01.03.2026 - ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் அங்கிருந்து கிளம்பி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அதன்படி இங்குத் தரிசனம் செய்துவிட்டு மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்கின்றன. இதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதோடு, மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டிற்குப் பிறகு தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்ற தகவல்களும் வெளியாகின்றன.
இதனிடையே, இந்த மாநாட்டிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் மதுரையில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டின் முகப்புகளில் முக்கிய தலைவர்களின் படம் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அந்த மாநாட்டு முகப்பில் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன.
அதில், தற்போது பெரியாரின் படம் நீக்கப்பட்டுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, திராவிட கட்சி என்று கூறிக்கொள்ளும் அதிமுக, தற்போது பெரியாரின் படத்தை நீக்கியுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், அதிமுக கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b