Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 28 பிப்ரவரி (ஹி.ச.)
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் உண்டியல்கள் நிரம்பியதால் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ.5.27 கோடியை தாண்டியது.
அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டத்தால் திருக்கோயில் பக்தர்கள் காணிக்கை உண்டியல்கள் நிரம்பியது.
இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூபாய் 5 கோடியே 27 இலட்சத்து 16 ஆயிரத்து 754 கிடைத்தது.
உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தங்கம் 565 கிராமும், வெள்ளி 26 ஆயிரத்து 265 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1324ம் கிடைத்தன.
இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உண்டியல் எண்ணிக்கையில் திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் / செயல் அலுவலர் அருட்செல்வம் மற்றும் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN