Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட பாஜக–அதிமுக–அமமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு மார்ச் 10ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என கூறப்படுகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவை முக்கியமாக போட்டியிட உள்ளன.
இந்தச் சூழலில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது. இந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கூட்டணி ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் நான்கு இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.
இந்த முறை பாஜக அதிக தொகுதிகள் கோரியுள்ளது. கிட்டத்தட்ட 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து காத்திருந்து பார்க்க வேண்டும்.
Hindusthan Samachar / ANANDHAN