Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.இதையடுத்து, ஈரானின் தலைநகர் தெக்ரான் மீது இஸ்ரேல் நேற்று (28.02.2026) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், பல கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது.
ஈரானின் உச்ச தலைவராக இருந்து வந்த அயதுல்லா அலி காமேனி (வயது 86) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட பாராமுல்லா பகுதியில் அமைந்துள்ள பட்டன் பகுதியில் இஸ்லாமியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போன்று உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மற்றொருபுறம் டெல்லியில் உள்ள ஈரான் கலாச்சார இல்லத்தில் (Iran Cultural House) காமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு கூட்டம் நடைபெற உள்ளது
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கூறியிருப்பதாவது,
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலைக் கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b