Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் 37,554 அரசுப் பள்ளிகள் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சோ்க்கை கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் நாளில் தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது.
மாணவர் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 2024-ஆம் ஆண்டுமுதல் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே மார்ச் மாதம் தொடங்கப்பட்டு வருகிறது.
அதற்கு பரவலாக பெற்றோர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
அதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான(2026-2027) மாணவர் சேர்க்கை நாளை (மார்ச் 2) தொடங்கவுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழக அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமான அளவில் உயர வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணா்வு செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b