Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
பாபநாசம் அருகே பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தவெக ஐடி விங்க் தனது எக்ஸ் பக்கத்தில்,
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே பழங்குடியின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் பிரதான சாலையிலேயே இத்தகைய கொடூரம் அரங்கேறி இருப்பது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்து உள்ளது என்பதற்குச் சான்று ஆகும்.
சாதாரண வீதிகள் முதல் மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்கள் வரை, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.
இதற்குத் திறனற்ற திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே முதன்மைக் காரணமாகும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது இன்று பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.
வீதிக்கு வீதி மதுபானக் கடைகளைத் திறந்து வைத்து, மக்களைப் போதைக்கு அடிமையாக்கி 'கல்லா' கட்டுவதிலேயே இந்த அரசு குறியாக இருக்கிறது.
கட்டுக்கடங்காத மது விற்பனை, தங்கு தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சீர்குலைந்து வரும் சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டாலின் மாடல் அரசு திணறி வருகிறது.
காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சரோ, மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை விட விளம்பரங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்.
குற்றங்களைக் கண்காணிக்கவோ, உரிய நடவடிக்கை எடுக்கவோ நேரமின்றி நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.
திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கும், அதிகார மமதைக்கும் தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN