Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று தனது 73-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் 'கேக்' வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளை முன்னிட்டு அவர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதன்பின்னர் அவர், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.
அதனை தொடர்ந்து கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம், சி.ஐ.டி. நகர் இல்லங்களுக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்த உள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து அவரிடம் ஆசி பெற உள்ளார்.
இந்த நிகழ்வுகள் முடிந்தவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு செல்கிறார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து அவர், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேடையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கேக்' வெட்ட உள்ளார்.
அதன்பின்னர், தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வரிசையாக வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b