Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை நேரு நகரில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து தான், தினம் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மணலி மற்றும் தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள
தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும், இப்பகுதியை கடந்து தான் பயணிக்கின்றன.
இப்பகுதியில் அடிக்கடி வந்து செல்லும் சரக்கு ரயில்களால், இந்த ரயில்வே கேட் தினமும் 30 முறைக்கு மேல் மூடப்படுவதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலும் அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த பிரச்னை 40 ஆண்டுகளாக தொடர்வதால், இதற்கு தீர்வு காண மேம்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மாநில நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்ததை அடுத்து, நேரு நகர் ரயில்வே கேட் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க முடிவானது.
ரயில்வே பகுதியில் பாலம் அமைக்க, ரயில்வே துறையும் ஒப்புதல் அளித்தது.
இதற்காக கட்டுமான பணியை, முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 12-ம் தேதி, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த மேம்பாலம் 448 மீ, நீளம்,
11 மீ, அகலத்துடன் அமைகிறது. இந்த மேம்பாலம் தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் சந்திப்பில் துவங்கி, ஐ.ஓ.சி.எல், சந்திப்பில் முடிவடைகிறது.
மேம்பால பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர்.
இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b