கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக மார்ச் 17 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜர் ஆகிறேன் - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தின் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்ப
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக மார்ச் 17 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜர் ஆகிறேன் - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தின் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக, சி.பி.ஐ. அதிகாரிகளிடம் த.வெ.க. -வினர் புகார் அளித்தனர்.

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில், செந்தில் பாலாஜி நேற்று ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால், அந்த சம்மனை, செந்தில் பாலாஜியோ, அவரது அலுவலக ஊழியர்களோ பெறவில்லை.

இதன் காரணமாக,செந்தில் பாலாஜிக்கு 'இ - மெயில்' வாயிலாகவும், 'சம்மன்' அனுப்பப்பட்டது.

அதற்கும், செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

சம்மனை ஏற்று விசாரணைக்கும் ஆஜராகவில்லை.

இதனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப, சி.பி.ஐ.அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி இருந்தது.

இந் நிலையில் இன்று (மார்ச் 10) எக்ஸ் சமூகவலைதளத்தில் சம்மன் வந்துள்ளது என செந்தில்பாலாஜி பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து,அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் மார்ச் 17ம் தேதி நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்க உள்ளேன்.

என குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b