Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
சென்னை, காமராசர் சாலை, மெரீனா கடற்கரையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ. 1 கோடியே 43 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள “கல்விச் சிலை – கற்றனைத் தூறும் அறிவு” சிலைகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று
(மார்ச் 10) திறந்து வைத்தார்.
மேலும், கற்றனைத் தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் என்ற நூலினை முதல்வர் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 78 கோடியே 41 லட்சம் செலவில் ராமநாதபுரம் மாவட்டம், வல்லிமாடன்வலசையில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோவில் மலைச்சாலை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அலுவலகக் கட்டடங்கள், பொது சுகாதார கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மதுரையில் சுப்பிரமணியபுரம் திட்டப் பகுதியில் ரூ. 62.68 கோடி செலவில் கட்டப்பட்ட 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், கோயம்புத்தூர், அவிநாசி பிரதான சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில் ரூ. 50 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடுவின் திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பதிவுத் துறை சார்பில் ரூ. 14 கோடியே 92 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள 7 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டத்தில் சர்க்கார்சாமக்குளம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தருமபுரி பதிவு மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம், ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
Hindusthan Samachar / vidya.b