Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் அரசு பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 பேர், தனித் தோ்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 பேர் எழுதவுள்ளனர்.
தேர்வுப் பணியில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமார் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபடவுள்ளனர்.
தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது.
முதல் பொதுத் தேர்வை எழுதவுள்ளீர்கள். அந்த Excitement இருக்க வேண்டுமே தவிர, பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது. காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்றெண்ணி மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். All the Best!
என்று கூறியுள்ளார்.
இன்று காலையில் இப்பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், சென்னை ராயபுரம் புனித பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Hindusthan Samachar / vidya.b