Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)
மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதனால் தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.
இதனையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி, நேற்று (11.03.2026) முறைப்படி தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார்.
அப்போது ஆர்.என். ரவிக்கு அதிகாரப்பூர்வ வழியனுப்பு விழா தமிழக அரசு சார்பில் காவல்துறையினர் மூலம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
இதற்கிடையே கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் அர்லேகர், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இன்று (12.03.2026) பதவியேற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்பு விழா இன்று பகல் 12:30 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (லோக் பவன்) அமைந்துள்ள பாரதியார் மண்டபத்தில் எளிய முறையில் நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அர்லேகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இப்பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு ஆளுநர் அர்லேகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் அர்லேகர் முன்னதாக இமாச்சல பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும், கோவா சட்டப்பேரவை சபாநாயகராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b