Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 மார்ச் (ஹி.ச.)
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலைக் கண்டித்தும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மீது தொடுத்திருக்கும் போர், உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தப் போர்ச் சூழல் உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் என்பதால், இதனைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளின் முன்பு திரண்ட ஆசிரிய மற்றும் ஆசிரியைகள், போருக்கு எதிராகவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளைக் கண்டித்தும் உணர்ச்சிமிக்க முழக்கங்களை எழுப்பினர்.
இந்தத் போராட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் முஜிபுர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாரி செல்வம், அமைப்புச் செயலாளர் பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
Hindusthan Samachar / vidya.b