Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 12 மார்ச் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), ஹெச்.பி.சி.எல் (HPCL) நிறுவன அதிகாரிகள் மற்றும் கேஸ் சிலிண்டர் ஏஜெண்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அருணா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விநியோக நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கவில்லை என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் காலை உணவு திட்டம், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம், சமூக நீதி விடுதிகள் மற்றும் ஆதிராவிடர் விடுதிகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் பொதுமக்கள் அச்சம் காரணமாக அதிகளவில் சிலிண்டர் முன்பதிவு செய்து வருவதால் சில இடங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் மாவட்டத்தில் சிலிண்டர் விநியோகத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அருணா விளக்கம் அளித்தார்.
மக்கள் அச்சமின்றி பொறுமையாக முன்பதிவு செய்தால் அனைவருக்கும் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல், அரசு சார்ந்த திட்டங்களும் தடையின்றி செயல்பட வேண்டும் என்பதற்காக விநியோகத்தை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் கேஸ் ஏஜெண்டுகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
Hindusthan Samachar / ANANDHAN