Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 மார்ச் (ஹி.ச.)
ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது மிகவும் கவலைக்குரியது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பரூக் அப்துல்லாவை குறிவைத்து ஜம்முவில் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதுடன் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்களை குறிவைத்து இவ்வாறு வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும்.
ஜம்மு நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சரும், காஷ்மீர் நேஷனல் கான்பரஸ் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அவர்களை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட முயற்சி செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்தியதால் அவர் உயிர் தப்பியிருப்பது, பெரிய நிம்மதியாகும்.
அரசியல் வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும் வன்முறை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளை ஜனநாயக முறையிலேயே வெளிப்படுத்த வேண்டும் என்பதே நாகரிக சமுதாயத்தின் அடிப்படை கோட்பாடாகும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபரை முழுமையாக விசாரணை செய்து, இதற்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளார்களா என்பதையும் கண்டறிந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன். மேலும் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ