Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் அதனை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட தமிழக கட்சி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 200 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சம்பத்,
சமூகநீதி கோட்பாடு அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக இருப்பதாகவும் போதை கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவியிருப்பதாகவும் அதனை கண்டிக்கும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் கருத்து குறித்தான கேள்விக்கு,
கழகத்தின் தலைவர் அதற்கான அறிக்கையை வெளியிடுவார் என கூறினார்.
இலவசங்கள் வேண்டாம் என்று கூறிய விஜய் தற்பொழுது இலவச திட்டங்களை தான் அறிவித்துள்ளார் என்று பல்வேறு கட்சிகள் தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு,
மக்கள் பயன்பெறும் எந்த ஒரு திட்டங்களையும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த ஒரு பலனையும் தமிழக வெற்றி கழகம் தடுத்தது கிடையாது அதைப் பற்றி விமர்சனம் செய்ததும் கிடையாது என்றும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அதனை ஓசி என்று இழிவாக பேசுவதை தான் தமிழக வெற்றி கழகம் கண்டிப்பதாக தெரிவித்தார்.
30 சதவிகிதம் அரசியல் வாதிகள் கமிஷன் ஆக பெறக்கூடிய தொகையில் மக்களுக்காக செய்வதில் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டார்கள் எந்த ஒரு கட்சியும் அதனை எதிர்க்காது அதை எதிர்த்தால் அதனை திருடக்கூடிய கட்சிகளாக தான் இருப்பார்கள் என பதிலளித்தார்.
தவெக-பாஜக கூட்டணி அமைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு ஊடகங்களில் தான் அவ்வாறு செய்திகள் வருகிறது ஆனால் தமிழக வெற்றி கழகம் அவ்வாறு கூறியதா? என கேள்வி எழுப்பிய அவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தான் கூட்டணி குறித்த முடிவை எடுப்பார் அவர் எந்த முடிவை எடுத்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நன்மைக்காக மட்டுமல்லாமல் தமிழக மக்களின் நன்மைக்காக எடுப்பார் என பதிலளித்தார்.
Hindusthan Samachar / Durai.J