Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 13 மார்ச் (ஹி,ச.)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்வானது திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 15.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் (OMR) மற்றும் பிற்பகல் (Descriptive) பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627002 என்ற தேர்வு மையத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி முற்பகல் நடைபெறவுள்ள தேர்வினை 330 தேர்வர்களும், பிற்பகல் நடைபெறவுள்ள தேர்வினை 334 தேர்வர்களும் எழுத உள்ளனர். மேற்படி முற்பகல் தேர்வானது காலை 09.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணியளவிலும், பிற்பகல் தேர்வானது 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணியளவிலும் முடிவடையும். மேற்படி தேர்விற்கு கலந்து கொள்ளும் தேர்வர்கள் காலை 08.30 மணிக்கு முன்பாகவும் மதியம் 01.30 மணிக்கு முன்பாகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
காலை 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்களும், பிற்பகல் 02.00 மேல் வரும் தேர்வர்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தேர்வின் போது தேர்வு கூடத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.
மேற்கண்ட தேர்வு நாளில் தேர்வர்கள் வந்து செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் தேர்வுக்கூட அனுமதி சீட்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்து, தேர்வர்கள் கடைபிடிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b