Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளுர், 13 மார்ச் (ஹி.ச.)
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இன்று (13.03.2026) திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில், “நடப்போம் நலம் பெறுவோம் 2.0” – 8 கி.மீ சுகாதார நடைபாதை
(Health Walk) திட்டம் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
உலக சுகாதார அமைப்பு தரவுகளின்படி உடற்பயிற்சி செய்வது என்பது நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் என்பது 28 சதவிகிதம் குறைக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதய நோய் என்பது 30 சதவிகிதம் வரை குறைக்கிறது என்கின்ற தகவலும் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் தினந்தோரும் நடைப்பயிற்சி என்பது மிக சிறந்த வகையில் உடலை பேணிக்காக்கும் அடையாளம் என்று கருதப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிக்காட்டுதலின்படி, நானும் நம்முடைய துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் ஜப்பானுக்கு JICA நிறுவனத்தோடு நிதி ஆதாரம் சம்மந்தமான விவரங்களுக்காக அங்கு சென்று இருந்தோம். டோக்கியோ நகரில் 8 கி.மீ. தொலைவிற்கு சுகாதார நடைபாதை சுகாதார நடைபாதை என்கின்ற ஒரு திட்டத்தை பார்த்தோம். டோக்கியோவில் அந்த இடத்தில் 8 கி.மீ. என்பது தினந்தோரும் எல்லோரும் நடப்பது என்பதை விழிப்புணர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக நாங்கள் அங்கு பார்த்தோம்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் டோக்கியோவில் இது போன்ற அமைப்பு உள்ளது, மக்கள் அங்கு வந்து விரும்பி நடக்கிறார்கள் என்று சொன்னவுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் அதேபோன்று சுகாதார நடைபாதை சுகாதார நடைபாதை இங்கேயும் நடத்தலாம் என்று அறிவுறுத்தினார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த சுகாதார நடைபாதை என்பது அனைத்து 38 வருவாய் மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு நாளும் இந்த சுகாதார நடைபாதை திட்டத்தை மக்கள் நாள் தோரும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாவட்ட அளவிளான சுகாதார அலுவலர்களும், மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களும் ஒருங்கிணைந்து இங்கு சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களை நடுவது, இருக்கைகளை அமைப்பது, selfie Point-களை ஏற்படுத்துவது, நடப்பதினால் கிடைக்கும் நன்மைகளை விழிப்புணர்வு பதாகைகளை அமைப்பது, 1 கி.மீ. தொலைவிற்கு ஒரு சைன் போர்டு அமைப்பது என்று பல்வேறு தகவல்களை செய்து இன்றைக்கு அது ஒரு மிக பெரிய திட்டமாக செயல்படுகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தினந்தோரும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு அப்பகுதிகளில் அமையப்பட்டுள்ள முகாம்களில் கலந்து கொண்டு அவர்கள் உடல் நலத்தை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது அன்று நடப்போருக்கு அனைவருக்குமே மாவட்ட சுகாதார அமைப்பு சார்பில் குடிநீர் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மிக வெற்றிகரமாக இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கடந்த 2023 நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர், முத்துலட்சுமி நகரில் தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களிலும் இத்திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். இந்த திட்டத்தை தொடங்கிய பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், மருத்துவ முகாம்களில் பரிசோதித்ததில் தொற்றா நோய் பாதிப்புகள் இதுவரை புதிதாக 7,011 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
நடப்போம் நலம் பெறுவோம் என்கின்ற திட்டம் நடப்பதை ஊக்குவிப்பதற்கும், நடக்க வேண்டும் என்பதை கடந்து பங்கேற்பவர்கள் தொற்றா நோய் பாதிப்புகளை தெரிந்து கொள்வதற்கும் மிக பெரிய உதவியாக இருந்தது. எனவேதான் தமிழ்நாடு முதல்-அமைச்சர் 2வது முறையாக 38 மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும் என்றார்கள். அந்த வகையில் இன்று (13.03.2026) ஆவடியில் தொடங்கி வைத்து இருக்கிறோம். இன்று காலை தமிழ்நாடு முழுவதிலும் 37 வருவாய் மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
8 கி.மீ நடப்பது என்பது 10,000 அடிகள் நடப்பதற்கு சமமாகும், ஒவ்வொரு நாளும் 10,000 அடிகள் நடப்பது என்பது உடல் நலனுக்கு நல்லது மற்றும் நீரிழிவு நோய் தாக்கம், உயர் ரத்த அழுத்த நோய் தாக்கம், இருதய நோய் தாக்கம் ஆகிய பாதிப்புகளை முறையை 28 முதல் 30 சதவீகிதம் பாதிப்புகளை குறைப்பதற்கு ஏதுவாக இந்த நடைப்பயிற்சி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகர், 4வது மண்டலக்குழுத் தலைவர் ஜோதிலட்சுமி, மாமன்ற உறுப்பினர் அபிஷேக் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b