Enter your Email Address to subscribe to our newsletters


புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.)
கடந்த மார்ச் 7 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக மேற்கு வங்கம் சென்றிருந்தார்.
அப்போது, அவரை வரவேற்க மாநில முதலமைச்சரான மம்தா பானர்ஜியோ அல்லது மாநில அமைச்சர்களோ வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது 'ப்ரோட்டோகால்' மீறல் என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், இவவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் மாநில அரசின் சாதனைகளைப் பகிரவும் குடியரசுத் தலைவரைச் சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் தரப்பில் நேரம் கேட்கப்படிருந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபிரையன், மார்ச் 9-ம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்திக்க அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், நேரமின்மை காரணமாக இந்தச் சந்திப்புக்கு அனுமதி வழங்க முடியாது என குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையின் இந்த முடிவைத் தொடர்ந்து, டெரிக் ஓபிரையன் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில், இந்த வார கால அட்டவணையில் உள்ள நெருக்கடியைப் புரிந்து கொள்வதாகவும், இருப்பினும் அடுத்த வாரம் அதாவது மார்ச் 16 - 20-ம் தேதிக்குள்ளாக ஏதேனும் ஒரு நாளில் 12 முதல் 15 பேர் கொண்ட தங்களது குழுவைச் சந்திக்க மீண்டும் ஒருமுறை பரிசீலித்து நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam