Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏப்ரல் 2ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சிபிஎம் தரப்பில் இன்று திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கு பின்னர் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் கூறியதாவது,
மதவாத சக்திகளை எதிர்த்து போராடுவதும் முக்கியம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தகுதிக்கேற்ப தொகுதிகளைப் பெறுவது முக்கியம். கட்சியினுடைய நலன் என்பதும் எங்களுக்கு முக்கியம். அதன் அடிப்படையில் கட்சியினுடைய பலத்துக்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
பல புது கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்துள்ள காரணத்தால் நீங்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு தொகுதிகள் தருவது சிரமம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இருந்தாலும் இதே சிரமத்திற்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதலான தொகுதியை வழங்கப்பட்டு இருக்கிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு கட்சிக்குக் கூடுதலான இடங்கள் வழங்கப்படும் என்று உங்களைப் போன்ற ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆகவே அவர்களுக்கெல்லாம் கூடுதலாகத் தருவதற்கு வாய்ப்பு இருக்கும் பொழுது எங்களுக்கு தர முடியாது என்று சொல்வதற்கான எந்த விதமான நியாயமும் இல்லை.
ஆகவே கடந்த முறையை விடக் கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய முடிவு.
இதை நாங்கள் அந்த பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b