Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 14 மார்ச் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க பாலக்காடு சாலையில் மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ. துாரம் மேற்குப்புறவழிச்சாலை அமைக்க அரசு முடிவு செய்தது.
முதல் கட்டம் - மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, இரண்டாம் கட்டம் -மாதம்பட்டி முதல் கணுவாய் வரை, மூன்றாம் கட்டம் கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை, மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.80 கி.மீ. சாலை அமைக்க, 2023
ஆக. 11ல் பணி துவக்கப்பட்டது.
மதுக்கரை, சுண்டக்காமுத்துார், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 47.96 ஹெக்டேர் தனியார் நிலம், 5.15 ஹெக்டேர் அரசு நிலம் எடுக்கப்பட்டது.
11.80 கி.மீ. துாரத்துக்கு நான்கு வழியாக தலா 7 மீட்டர் அகலத்தில் ஓடுதளம் உருவாகியுள்ளது.
5 மீட்டர் அகலத்துக்கு மையத்தடுப்பு கட்டப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் மின் விளக்குகளே இல்லை.
கிராம சாலைகள் இணையும் இடங்களில் சோலார் வசதியுடன் தானியங்கி சிக்னல் கம்பம் நிறுவப்பட்டு உள்ளன. ஆனால் பேருந்து நிறுத்தங்கள் கட்டவில்லை. தடுப்புச்சுவர் பணி முடியவில்லை. கிராம சாலைகள் சந்திக்கும் இடங்களில், சாலைத்தீவு திடல்கள் கட்டும் பணி இப்போதுதான் நடைபெற்று வருகின்றது.
2 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 10க்கும் மேற்பட்ட இடங்களில் மையத்தடுப்பு இடிக்கப்பட்டு, குறுக்கு ரோடுகளில் இருந்து வருவோருக்கு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுவே விபத்து ஏற்பட காரணமாகி விடுமோ என்ற அச்சத்தையும் உண்டாக்குகிறது.
இப்பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறுகையில்,
பேரூர், மாதம்பட்டி, கோவை குற்றாலம் செல்ல இச்சாலையை மக்கள் பயன்படுத்துவர்.
நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையும்.
2ம், 3ம் கட்ட பணிகள் நடக்கின்றன.
அறிவொளி நகரில் விபத்து தவிர்க்க மேம்பாலம் கட்டுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.
சுரங்கப்பாதை அமைக்கப்படும், தேவைப்பட்டால் வேகத்தடை அமைக்கப்படும், என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b