Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏப்ரல் 2ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்து திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதனைவிட அதிக தொகுதிகளை கேட்டோம். ஆனால் அதிக கட்சிகள் சேர்ந்திருப்பதால், ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ளுங்கள் என சொன்னார்கள்.
அதேநேரம், கூடுதல் தொகுதி வேண்டும் என மீண்டும் கேட்டுள்ளோம். எங்கள் கூட்டணியில் உரையாடல் செய்வதற்கான ஜனநாயகம் உள்ளது. அந்தவகையில் பேசுவோம். கூடுதல் தொகுதிகள் கேட்போம்.
பாஜகவை வீழ்த்துவதுதான் எங்களது முதல் குறிக்கோள். தமிழகத்தில் பாஜகவை வீழ்த்தி, இந்தியாவிற்கே திசை காட்ட வேண்டும். பாஜக, ஆட்சி, அதிகாரத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கொள்கை முடிவு.
எனவே, இந்த கொள்கை முடிவில் உறுதியாக நின்று, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b