Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 15 மார்ச் (ஹி.ச)
நெல்லை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). கூலித் தொழிலாளியான இவருக்கு பேச்சியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே கணவர் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
காலப்போக்கில் கருத்து வேறுபாடு முற்றியதால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மனைவி பேச்சியம்மாள் தனக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், சுதாகர் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேச்சியம்மாள் இன்று
(மார்ச் 15) திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, பின் தொடர்ந்து வந்த அவரது கணவர் சுதாகர் பேருந்து நிலையத்தில் வைத்து பேச்சியம்மாளை வழிமறித்து பேசியுள்ளார்.
அதில் கோபமடைந்த பேச்சியம்மாளுக்கும், சுதாகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றிய நிலையில், சுதாகர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளை தாக்க முயன்றுள்ளார்.
அதனைக் கண்டு சுதாரித்த பேச்சியம்மாள் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் விடாது துரத்தி சென்ற சுதாகர் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து நிலையத்தின் புறக்காவல் நிலையத்திலிருந்த போலீசார், பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், சுதாகர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஏற்கெனவே சரணடைந்தார் என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், பேச்சியம்மாள் அடிக்கடி செல்ஃபோனில் பேசியதால், அவரது நடத்தையின் மீது சந்தேகப்பட்டு சுதாகர் தகராறு செய்துள்ளார்.
இதன் காரணமாகவே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பேச்சியம்மாள் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். குழந்தைகளை வளர்ப்பதற்காக நெல்லை சந்திப்பு அருகே உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தும் வந்துள்ளார்.
தினமும் பாலமடையில் இருந்து பேருந்தில் நெல்லை சந்திப்புக்கு வருவது வழக்கம். இன்றும் வழக்கம்போல் அவர் வேலைக்கு வந்தபோது சுதாகர் அவரை பின் தொடர்ந்து வந்து கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN