Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 15 மார்ச் (ஹி.ச)
தூத்துக்குடி திரேஸ்புரம் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் நாட்டுப்படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பியபோது, அவர்களுக்கு மீன்பாடு சிறப்பாக அமைந்திருந்தது. இதனால் டன் கணக்கில் பல்வேறு வகை மீன்கள் கரைக்குக் கொண்டு வரப்பட்டன.
மீன் வரத்து அதிகரித்ததோடு, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் துறைமுகத்தில் குவிந்தனர்.
வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.
சீலா மீன் கடந்த வாரம் கிலோ ரூ. 1,000-க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோ ரூ. 900-க்கு விற்பனையானது.
விளை மீன், ஊழி, பாறை கிலோ ரூ. 550-லிருந்து குறைந்து, தரத்தைப் பொறுத்து ரூ. 250 முதல் ரூ. 500 வரை விற்பனையானது.
சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,000 வரை விற்பனையானது. வங்கனை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை விற்பனையானது. சூப்பர் நண்டு கிலோ ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது.
கேரை, சூரை கிலோ ரூ. 200 வரையிலும், மஞ்சகிளி மீன் கிலோ ரூ. 150-க்கும் விற்பனையானது.
மீன்களின் விலை குறைந்ததால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மீன்களை அதிக அளவில் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
கொண்டு வரப்பட்ட மீன்கள் அனைத்தும் விறுவிறுப்பாக விற்றுத் தீர்ந்ததால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Hindusthan Samachar / vidya.b