Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)
கோவைப்புதூரில் பெண் காவலருக்கு மேலதிகாரி செந்தில்குமார் பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டனம் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கோவைப்புதூர் 4-வது பட்டாலியனில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அதே பிரிவின் மேலதிகாரி செந்தில்குமார் பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய உயரிய பதவியில் இருப்பவரே, தன் கீழ் பணியாற்றும் பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
விடியல் தருவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அவர்கள் தஞ்சம் அடைவது காவல்துறை நிலையங்களைத்தான். ஆனால், அங்கே பணியாற்றும் பெண் காவலர்களுக்கே இன்று பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக காவல்துறையில் பெண் அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் இத்தகைய கொடுமைகள் குறித்துப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து முன்னுதாரணத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
நிர்வாகத் திறமையற்ற இந்த ஆட்சியில், காவல்துறை அதிகாரிகளின் மீதான பயம் குறைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. சாதாரணப் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசே, தன் துறையில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் இருப்பது வெட்கக்கேடானது.
சமூகத்தில் பெண்கள் அச்சமின்றி நடமாட வழிவகை செய்ய வேண்டிய முதல்வர், தன் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைத் துறையில் இத்தகைய அவலங்கள் நடப்பதை எப்படி அனுமதிக்கிறார்?
வெறும் விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு, நிர்வாக ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் காவல்துறையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது.
இது வெறும் தனிநபர் குற்றமல்ல, இந்த அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியின் அடையாளம் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ