Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 16 மார்ச் (ஹி.ச.)
பீகார், ஒடிசா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 11 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
பீகாரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான போட்டி நிலவி வருவதால், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிகள் தங்கள் கட்சி எம்எல்ஏக்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது.
பீகார் மாநிலத்தின் முதல்வராக கடந்த 2005ம் ஆண்டு முதல் சுமார் 10 முறை பதவி வகித்து சாதனை படைத்த ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ் குமார், ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் எனும் தனது விருப்பத்தால் கடந்த 5ம் தேதி அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பீகாரில் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றதை முன்னிட்டு முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பீகாரில் சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிதிஷ் குமார் யுகம் முடிவுக்கு வந்து, அம்மாநில அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
நிதிஷ் குமாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து,தற்போது துணை முதல்வராக இருக்கும் சாம்ராட் சவுத்ரி அடுத்த முதல்வராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த புதிய அமைச்சரவையில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் பெயரும் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b