Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 மார்ச் (ஹி.ச)
தமிழ் சிறுகதையின் தடங்கள் என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என காங்கிரசு கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகிலுள்ள நாகாலாபுரத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர் திரு.ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுக்காக, இந்திய அரசால் வழங்கப்படும் ஞானபீட விருதிற்கு பின் வழங்கப்படும் இரண்டாவது உயரிய இலக்கிய விருதாகும்.
தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழ் சிறுகதைகளின் பாரம்பரியமும் குறித்து ஆழமான பார்வையை வழங்கும் இந்த நூலுக்குக் கிடைத்திருக்கும் இந்த உயரிய அங்கீகாரம், எழுத்தாளர் அவர்களின் இலக்கியப் பங்களிப்பிற்கான சிறந்த பாராட்டாகும். இவ்விருதை பெற்றிருப்பதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவ்விருதை பெற்றுள்ள ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை எழுதி தமிழ் இலக்கிய உலகை வளப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்புடன் வாழ்த்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ