Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 17 மார்ச் (ஹி.ச)
தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜூனா பேசியது illusion என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும்.
தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்.
அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ