Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 மார்ச் (ஹி.ச.)
மதுரையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ரூ.7,000 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்தது. இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிறுவன இயக்குநர்கள் பலர் ஜாமீன் பெற்றனர். இவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி பரத சக்கரவர்த்தி இன்று விசாரித்தார்.
பின்னர் நீதிபதி, இதுவரை மொத்தம் எத்தனை பேர் மின்னணு சொத்து ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்?” எனக் கேள்வி எழுப்பினார்.
பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் கூறுகையில், 400-க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, ரூ.7,000 கோடி மோசடி நடந்துள்ளது. நீதிமன்றம் பலகட்ட முயற்சிகளை எடுத்து நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மனையிடங்களை விற்பனை செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும் 400 பேர் தான் பதிவு செய்துள்ளனர் என்பது கவலை அளிக்கிறது.
இது, பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் இன்னும் கூடுதலாக விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது, எனக் குறிப்பிட்டார்.
அதற்கு அரசுத் தரப்பில் கூறுகையில், நியோமேக்ஸ் நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான டிடிசிபி அங்கீகாரம் பெற்ற மனையிடங்களுக்கான ஏலம் எம்எஸ்டிசி வலைத்தளம் மூலம் மார்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் வலைதளத்தில் பதிவு செய்து, ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மார்ச் 23, 24-ஆம் தேதிகளில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை அணுகி உதவி பெறலாம். ஏலம் விடப்படும் சொத்துகளின் விபரங்களை அறிய விரும்பினால், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது,
எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான மனையிடங்கள் மின்னணு ஏலம் விடப்படுவது தொடர்பாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தி வழக்கை மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Hindusthan Samachar / vidya.b