Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 மார்ச் (ஹி.ச.)
இந்திய அஞ்சல் துறையில் தபால்களை 24 மணி நேரத்திற்குள் பட்டுவாடா செய்யும் 'அதிவிரைவு சேவை' இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விரைவு தபால் (Speed Post), அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மற்றும் பேமெண்ட் வங்கி ஆகியவற்றில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் அஞ்சல் துறை, தற்போது புதிய மைல்கல்லாக இந்தச் சேவையைத் தொடங்குகிறது.
இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் மற்றும் அவசர ஆவணங்களை அனுப்பிய அடுத்த நாளே (24 மணி நேரத்திற்குள்) உரியவரிடம் சேர்க்க முடியும். குறிப்பாக, அரசுத் துறை சார்ந்த அவசரக் கடிதப் பரிமாற்றங்களுக்கு இச்சேவை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிவிரைவுச் சேவை முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.
தனியார் கூரியர் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மிகவும் குறைந்த கட்டணத்தில் இச்சேவை வழங்கப்பட உள்ளது. 24 மணி நேரச் சேவையுடன், 48 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் 'பிரீமியம் டெலிவரி' சேவையும் அறிமுகமாகிறது.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அஞ்சல் துறை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Hindusthan Samachar / vidya.b