Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி வரும் 30ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தி.மு.க. சார்பில் தமிழ்நாடு - புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.
22ஆம் தேதி (22.03.2026) வரை நடைபெற உள்ள இந்த நேர்காணல் 2வது நாளாக இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இதன்படி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 22 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்த 750 பேரிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இன்று காலை தூத்துக்குடி தெற்கு, வடக்கு. திருநெல்வேலி கிழக்கு, மத்திய மேற்கு. தென் காசி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு என கட்சி ரீதியிலான மாவட்டங்களுக்கும், பிற்பகலில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு, தேனி வடக்கு, தெற்கு, விருதுநகர் வடக்கு. தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய கட்சி ரீதியிலான மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.
இதில் தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொகுதியான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியும் வருகிறது.
எனவே இன்றைய நேர்காணலில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் முதல்-அமைச்சர் நேர்காணல் நடத்துவார்.
இந்த நேர்காணலின் போது தொகுதி நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து வேட்பாளர்களுடன் கலந்துரையாடுதல் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b