Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரக்கூடிய ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய சூழலில் அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது.
அதில் முக்கியமாக நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை, அதாவது மார்ச் 19, 2026 அன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
இதில் நாம் தமிழர் கட்சியை எடுத்துக் கொண்டால், கட்சி தொடங்கியதிலிருந்து தற்போது வரை தனித்தே களம் காண்ந்து வருகிறது.
எந்த ஒரு கட்சியுடனும் இதுவரை கூட்டணி வைக்காமல் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரையில், தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட எட்டு சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வரக்கூடிய 226 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் இந்த வாக்கு வங்கி இரட்டை இலக்கமாக, கிட்டத்தட்ட 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும் என அரசியல் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது “இலவசங்கள்” பற்றிய விமர்சனமே ஆகும். அதாவது, தமிழக அரசால் வழங்கப்படும் இலவசங்களால் மக்கள் தொழில்முறை வாழ்க்கையை மறந்து விடுகின்றனர் என அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த சூழலில் “தேர்தல் அறிக்கை – ஆட்சி செயற்பாட்டு வரைவு” என்ற பெயரில் நாளை வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை வெளியிட உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026 நூல் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN