Enter your Email Address to subscribe to our newsletters

நாக்பூர், 19 மார்ச் (ஹி.ச.)
மகாராஷ்டிர மாநிலத்தில் ‘குடி பட்வா’ பண்டிகை இன்று விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
மராத்தி புத்தாண்டை முன்னிட்டு நாக்பூரில் நடைபெற்ற ‘ஷோபா யாத்திரை’ ஊர்வலத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின.
நகரம் முழுவதும் வண்ணமயமான ஊர்வலங்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
குறிப்பாக, குழந்தைகள் பாரம்பரிய ‘லெஜிம்’ நடனம் ஆடி கொண்டாட்டங்களுக்கு உற்சாகத்தை கூட்டினர்.
மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இவ்விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட ஊர்வலத்தில் பங்கேற்று, நாக்பூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்தார்.
பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், இவ்விழாவின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
ஊர்வலத்தில் மகாராஷ்டிராவின் பல்வேறு கலாச்சார அம்சங்கள் பிரதிபலிக்கப்பட்டன. லெஜிம் நடனக் குழுக்கள், வார்காரி அணிவகுப்புகள் மற்றும் வரலாற்று, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நபர்களைச் சித்தரிக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.
மேலும், மராத்தி திரைப்பட நடிகை சாய் தம்ஹங்கரும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
மொத்தத்தில், நாக்பூர் நகரம் முழுவதும் நடைபெற்ற குடி பட்வா விழா, ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகளின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
Hindusthan Samachar / JANAKI RAM