கன்னியாகுமரி திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பு விழா கோலாகலம்
கன்னியாகுமரி, 19 மார்ச் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட வெங்கடாஜலபதி கோவிலில், தெலுங்கு வருடப்பிறப்பு விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழா
Telugu New Year Celebration


கன்னியாகுமரி, 19 மார்ச் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட வெங்கடாஜலபதி கோவிலில், தெலுங்கு வருடப்பிறப்பு விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையுடன் கோவில் நடை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெங்கடாஜலபதிக்கு பூலங்கி சேவை, விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், அர்ச்சகர்கள் புதிய ஆண்டிற்கான பஞ்சாங்கத்தை வாசித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு மங்களப் பொருட்களைப் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் பூஜை பொருட்களைத் தலையில் சுமந்தபடி, மேளதாளங்கள் முழங்கக் கோவில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அந்தப் பொருட்கள் வெங்கடாஜலபதி முன்பு படைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

மேலும், கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, கருட பகவான், பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை 5 மணிக்குத் தோமாலை சேவையும், இரவு 8 மணிக்கு ஏகாந்த சேவையும் நடைபெற உள்ளன.

இதனைத் தொடர்ந்து, பெருமாள் பள்ளியறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் இன்றைய விழா நிறைவடையும்.

Hindusthan Samachar / vidya.b