இந்தியா உலகளாவிய ட்ரோன் உற்பத்தி மையமாகத் திகழ வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச) புதுடெல்லியில் தேசிய பாதுகாப்புத் தொழிற்சாலைகளுக்கான 2 நாள் மாநாடு நடைபெற்று வருகின்றது. இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, ரஷ்யா-உக்ரைன் போர
இந்தியா உலகளாவிய ட்ரோன் உற்பத்தி மையமாகத் திகழ வேண்டும் - மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங்


புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச)

புதுடெல்லியில் தேசிய பாதுகாப்புத் தொழிற்சாலைகளுக்கான 2 நாள் மாநாடு நடைபெற்று வருகின்றது.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது,

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான்-இஸ்ரேல் இடையேயான பதட்டங்கள் உள்ளிட்ட தற்போதைய உலகளாவிய மோதல்கள், நவீன போரில் ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்புத் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியுள்ளன.

ட்ரோன் உற்பத்தியில் தன்னிறைவு அடைய, தயாரிப்பு மட்டத்தில் மட்டுமல்லாமல், மென்பொருள், என்ஜின்கள், பேட்டரிகள் மற்றும் மூலப்பொருட்கள் போன்ற முக்கிய பாகங்களிலும் இந்தியா ஒரு செயல்திட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ட்ரோனின் அச்சுகள் முதல் அதன் மென்பொருள் வரை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும். இந்தியா உலகளாவிய ட்ரோன் உற்பத்தி மையமாகத் திகழ வேண்டும். பல நாடுகள் இன்னும் முக்கிய பாகங்களுக்காக இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளன.

ஒரு வலுவான பாதுகாப்பு உற்பத்திச் சூழலமைப்பை உருவாக்குவதில் தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் தனியார் தொழில்துறை மேம்படுத்த வேண்டும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் முழுமையான அரசாங்க ஆதரவு வழங்கப்படும்.

இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை 2012-13ல் சுமார் 4.67 கோடியிலிருந்து இன்று சுமார் 8 கோடியாக, கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

இது தொழில்முனைவில் ஏற்பட்ட எழுச்சியையும் பொருளாதார வளர்ச்சிக்கு அவற்றின் அதிகரித்து வரும் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.

கண்டுபிடிப்பாளர்களும் தொழில்முனைவோரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஆத்மநிர்பர் பாரத் மற்றும் விக்சித் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு உற்பத்தித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, மேம்பட்ட உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் உள்ளிட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும், பிற உயர்மட்ட இராணுவத் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b