Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 02 மார்ச் (ஹி.ச.)
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உலகம் எங்கிலிருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோவிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். மார்ச் 2 ஆம் தேதியான இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7.30 மணிக்கு விநாயகர், சுவாமி, தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் ரத வீதியில் வலம் வந்து அருள் பாலித்து வருகின்றனர். முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாசித் திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளை மார்ச் 3 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
மார்ச் 4 ஆம் தேதி மாசித் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்
Hindusthan Samachar / vidya.b