தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) கோவில்பட்டி தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவி
Rs. 4 lakh compensation


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

கோவில்பட்டி தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டி குடோனில் இன்று (02.03.2026) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த தீ விபத்தில் கோவில்பட்டி வட்டம், கொடுக்கம்பாறை கிராமம், விஜயாபுரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) த/பெ.சமுத்திரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து (வயது 42) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோவில்பட்டி வட்டம், கிழவிபட்டி கிராமம், துரைசாமிபுரம் பகுதியில் வசித்துவரும் கணேசன் (வயது 47) ஆகிய இருவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு,

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b